ஒரு கூரான ஆயுதம் கொண்டு குத்தி கிழித்தாலும் வராத ரணம் சில உதாசீனங்களால் வந்துவிடுகிறது.
தூக்கி வைத்து கொஞ்சிக்கொண்டே பழக்கப்படுத்திய ‘மழலைக்கு’ இறக்கி வைத்தவுடன் வரும் வெறுமை உதாசீனம்.
அதற்கு வாய்மொழி தெரியாது.
இரு கை நீட்டி இன்னும் கொஞ்சம் தூக்கி வைத்துக்கொண்டிருந்தால் தான் என்ன? என்று வாய் பிதுக்கி
உள்ளம் வலித்து அழத்தான் தெரியும்.
ஏன் இறக்கி விட்டார்கள் என ஆராய்ச்சி செய்யாது.
அதற்கு தேவை
அழுகை நிற்கும் முன்
கோவம் அடங்குமுன்
திரும்ப தூக்கி வைத்து,
என் ராசா இல்ல
என் அம்மு இல்ல இனி இறக்கமாட்டேன் என்ற மழலையாய் கேட்கும் பாவமன்னிப்பு தான்.
அதற்கு தேவை அவ்வளவு தான்.
அதன் மூளை அவ்வளவு தான்.
அழுதால் அழுகும்.
கோபப்பட்டால் அழுகும்.
திட்டினால் அழுகும்.
முறைத்தால் அழுகும்.
இறக்கி வைத்தால் அழும்.
தன்னை தவிர்த்து வேறொன்றை தூக்கினால் கதறி அழும்.
சிரித்தால் மட்டுமே சிரிக்கும்.
அதற்கு தேவை
அந்த மழலைக்கு தேவை உடனடி நிவாரணம் சிரிப்பு மட்டுமே..
பழக்கப்பட்ட கைகளின் ஸ்பரிசத்திலிருந்து கொஞ்சம் அணைப்பு குறைந்தாலும்
குறைத்தாலும் அது எடுத்துக்கொண்ட பெயர் உதாசீனம் தான்.
தள்ளி வைக்க வில்லையே
அருகில் தானே வைத்திருக்கிறேன் என்றாலும் அதற்கு அது தேவையில்லை.
தூக்கி வைத்து கொண்டு
உரசிக்கொண்டு
உன் அணைப்பின் கதகதப்பிலியே
உன் நெஞ்சாங்கூட்டிலியே வைத்திரு..
அதன் வேண்டுதல்கள் எல்லாம் ‘அவ்வளவே’..




