மனைவி ஒருநாள் தன் கணவனுக்கு
பிடித்த மீன் குழம்பு சமைத்தாள். இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள். தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை. கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட அமரச் சொன்னாள், மனைவி சாப்பாடு பரிமாறினாள்.
” என்னங்க குழம்பு எப்படி இருக்கு ?”
” நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா கைப் பக்குவம் உனக்கு இல்ல… எங்கம்மா வைப்பாங்க பாரு மீன் குழம்பு , தெருவே மணக்கும். அப்பப்பா… ருசி சூப்பரா இருக்கும்”.
அம்மா குழம்பின் ருசியை பாராட்டிவிட்டு கணவர் எழுந்தார். மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து.
“எப்ப பாரு அம்மா… அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு” என்று முணுமுணுத்தாள்.
அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்.
“அம்மா சூப்பர்மா… எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது. உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா ” என பாராட்டினான்.
அவளுக்குப் புரிந்தது…
ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று. நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே உயர்த்தி பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லைதான் என்று புரிந்து கொண்டாள்.
புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு..




