நாம் சட்னி வகைகளில் பல சட்னிகளை சாப்பிட்டு இருப்போம். நமக்கு தெரிந்தது எல்லாம் தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி தான். இப்போது, நாம் வித்தியாசமான முறையில் மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானப் பொருட்கள் :
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது),
பச்சை மிளகாய் – 2,
காய்ந்த மிளகாய் – 6,
பொட்டுக்கடலை – 1 கப்,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி,
கடுகு – 1/2 தேக்கரண்டி,
வெள்ளை உளுந்து – 1/2 தேக்கரண்டி,
சின்ன சீரகம் – 1/2 தேக்கரண்டி,
பூண்டு – 10 பல்,
தண்ணீர் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்த பிறகு அதில், 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடான பிறகு 10 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய், 4 காய்ந்த மிளகாய், 2 நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்கு கண்ணாடி போல வந்ததும் இறக்கி ஆற வைக்க வேண்டும்.
பிறகு, அதில் 1 கப் பொட்டுக்கடலை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். போதிய அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் பதத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து, அதே வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி வெள்ளை உளுந்து, 2 காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை 1 கொத்து மற்றும் 1/2 தேக்கரண்டி சின்ன சீரகம் சேர்த்து பொரியவிட்டு தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான் மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி தயார்.




