அட்டகாசமான சுவையில் காளான் கொத்துக்கறி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சைவப் பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் காளான். காளானை வித்தியாசமாக செய்து சாப்பிடும் நீங்கள் ஒரு முறை கொத்துகறி வைத்து சாப்பிட்டுப் பார்க்கலாமே.
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அட்டகாசமான கலவையாக இருக்கும் கொத்துகறி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
அன்னாச்சி பூ – 1
வரமிளகாய் – 4
முந்தரி – 10
மல்லி – 1 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்துக்கறிக்கு
காளான் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாயை அடுப்பில் வைத்து மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தொடர்ந்து இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கும். அவற்றின் பச்சை வாசனை போன பிறகு அதில் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்த பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து கிளறிவிடவும்.
ஒரு 5 நிமிடம் மூடி வைத்து சமைத்த பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி இறக்கவும். சுவையான காளான் கொத்துக்கறி தயார்.




