தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட இன்னும் 1 நாளே உள்ள நிலையில், கடைத்தெருக்களில் பொதுமக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் காணப்படுகிறது. மேலும், வேறு மாநிலங்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால், சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, மாதவரம் மற்றும் கேளம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். மேலும், கடந்த 2 தினங்களில் மட்டும் 4.13 லட்சம் பேர் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் பயணித்துள்ளார்கள் என்று தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் மொத்தம் 7513 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.




