தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு…!!!
தலைக்கு மேல்
நான் தூக்கி கொஞ்சிய
என் தங்க மகன்
என் தலைக்கு மேல்
வளர்ந்து நிற்கிறான்
ஒரு பயம் எனக்கு
எப்போதாவது ஒருநாள்
என் விசயத்தில் தலையிடாதே
என்று சொல்லிவிடுவானோ என்று
மகனே மறந்து
அப்படி சொல்லிவிடாதே
மரணித்து போய்விடுவேன்
சின்ன வயதில்
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய்
நான் சலிக்காமல் பதில் சொல்வேன்
என் வயதான காலத்தில்
நானும் உன்னிடம் குழந்தை போல்
வினா எழுப்பக்கூடும்
கத்தாதே வாயை மூடு
என்று சொல்லிவிடாதே
வலி தாங்க முடியாத பாவி நான்
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த
சோற்றுப் பருக்கையை
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில்
என் வாய்க்கொண்டு செல்லும்
உணவு தட்டி தரையில் விழக்கூடும்
தவறியும் என்னை திட்டாதே
தாங்க முடியாது என்னால்
என் சிறுநீர் பை
பலம் இழந்திருக்கக்கூடும்.
சில இடங்களில்
சிறுநீர் சிந்தியிருக்க கூடும்
இச்…….சீ என்று முகம் சுழிக்காதே
என் முந்தானையில்
உன் சிறுநீர் வாசம்
இன்னும் மறையவேயில்லை
மயானம் நடந்து போக
திராணி இருக்கும்போதே
நான் இறந்துவிடவேண்டும்
மறந்தும் முதியோர் இல்லத்தில்
என்னை மூழ்கடித்துவிடாதே
ஒரு வருடம்
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை
பாலாக்கி பருக செய்தவள் நான்
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே
நான் இறப்பதற்குள்
ஒரு முறையாவது
உன் மடியில் என்னை உறங்க வை
என் உயிர் பிரியும் நேரம்
நீ என் பக்கத்தில் இரு
கரம் கூப்பி கேட்கிறேன்
இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய்
என்னை அறிவாய்
என்னை நேசிப்பாய்
என்ற நம்பிக்கையில் அல்ல
ஒவ்வொரு தாயின்
உணர்வும் இதுதான்
என்பதை நீ உணர வேண்டும்
பெண்மையை நீ மதிக்க வேண்டும்.
இதை படித்து நீ அழுவாய்
என்று எனக்குத் தெரியும்.
அழாதே பெண்மையை மதி
அதுபோதும் நன்றி மகனே.




