Oplus_16908288
தூய்மை ஆன்மீகத்தின் அஸ்திவாரம்..
1)தூய்மை இல்லாமல் கடவுளை நெருங்க முடியாது. அகத்தூய்மையும் புற தூய்மையும் ஆன்மீகத்தில் பெரும் பங்காற்றுகின்றன. நமது அப்பழுக்கற்ற மனதை கடவுள் பார்க்கின்றார். அந்த மனதில் மட்டுமே அவரது அன்பு குடிகொள்ளும். அப்பழுக்கற்ற என்றால் பிறரது குறைகளை கூட தன் மனதில் நினைக்காதது. தன்னுடைய குறைகளை சோதித்தறிந்து அதை நீக்கி கொள்வதுதான் தூய்மைக்கான பலமான அஸ்திவாரம்.
2) தூய்மை என்பது ஒரு தாயை போன்றது. தூய்மை என்ற தாய் இருக்கும் இடத்தில் சுகம் சாந்தி என்ற குழந்தைகள் அதனுடன் இருக்கும். எங்கே தூய்மை இருக்குமோ அங்கே மனதில் நிம்மதி இருக்கும். தூய்மை இல்லாத இடமே பாவம் நிறைந்ததாக மாறுகின்றது. பாவம் தான் நரகம் என அழைக்கப்படுகின்றது. பாவம் இருக்குமிடத்தில் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் திருப்தியும் இருக்காது.
3) தூய்மைக்கான அஸ்திவாரம் நல்ல எண்ணங்கள். நாம் நல்ல எண்ணங்கள் நிறைந்தவராக இருந்தால் பிறரை குறை கூறுவதற்கான வேலை அங்கே இல்லை. தூய்மை இருக்கும் இடத்தில் வார்த்தைகளே வரங்களாக வெளிப்படும். மனம் பிறரை ஆசிர்வதித்து கொண்டே இருக்கும். தூய்மை இல்லாத மனமே பிறருக்கு சாபம் கொடுக்கின்றது. பாவம் செய்வதாலும் பாவத்திற்கு உடன்படுவதாலும் அங்கே சாபம் என்பது துளிர் விட ஆரம்பிக்கின்றது.
4) தன் தவறை கடவுளிடம் சொல்பவன் தூய்மைக்கான முதலடியை எடுத்து வைக்கின்றான். கடவுளிடம் உறுதிமொழி கொடுப்பவன் தூய்மைக்கான அஸ்தி வாரத்திற்கான முதல் கல்லை எடுத்து வைக்கின்றான் தூய்மைக்கான செயலை செய்பவன் அந்த அஸ்திவாரத்தின் மேல் கட்டிடத்தை எழுப்புகின்றான். வாழ்வின் இறுதிவரை தூய்மையைக் கடைபிடிப்பவன் அந்தப் புனிதமான இல்லத்தில் கிரஹப் பிரவேசம் செய்கின்றான்.
5) தூய்மை என்பது தன்னை பரிசோதித்தல். பிறரை பரிசோதிக்கும் போது அங்கே தூய்மை இழக்கின்றோம். பிறரை பரிசோதிப்பது கடவுளுடைய வேலை.தன்னை பரிசோதிப்பதே நம்முடைய வேலை. ஏனென்றால் கடவுள் என்றென்றும் தூய்மையாக இருக்கின்றார். எனவே அவரை நெருங்கும் ஒருவரை அவர் தூய்மையாக இருக்கின்றாரா என பலவிதம் பரிசோதிக்கின்றார்.
6) நம்முடைய தவறுகளுக்கு நாமே காரணமே தவிர பிறர் காரணம் அல்ல. தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் பொழுது நாம் பிறரை குறை கூறுவதால் உத்தமர்களாக ஆகிவிட முடியாது. எனவே தன்னை சோதித்து மாற்றிக் கொள்வதே தனது ஆன்மாவை பிரகாசிக்க வைப்பதாகும்.
7) மாயை என்பது தூய்மையை இழக்க வைப்பதாகும். மனிதன் மாயை அல்ல. மனிதனைப் பற்றிய வரும் எண்ணங்களே மாயை. மாயை உடல் பொருள் சூழ்நிலை சுயநிலை இவற்றில் எங்கே பலவீனம் இருக்கின்றதோ அதன் மூலமாக உள்ளே பிரவேசிக்க முயற்சி செய்யும். அணையில் சிறிது விரிசல் ஏற்பட்டாலும் முழுவதும் உடைந்து விடும்.எனவே நமக்குள்ளும் சில சூழ்நிலைகளில் மாயையின் மூலமாக தூய்மையற்ற எண்ணங்கள் என்ற விரிசல்கள் ஏற்படுத்த முயலும். அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளாவிட்டால் நாம் சேர்த்து வைத்த நல்லெண்ணங்கள் என்ற புனித நீரானது மனதை விட்டு வெளியேறி விடலாம். சிறிய காயம் தான் பெரிய ஆபரேஷனில் முடிகின்றது. எனவே நம்முடைய மனதை தூய்மையற்ற எண்ணங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்த மனதிற்கு பாதுகாப்பாக வைப்பதற்காக மனதில் இறைவனை அமர்த்தவேண்டும். அதற்கும் ஒரு நியமம் உண்டு தூய்மையாக இருந்தால்தான் இறைவன் அந்த மனதில் அமருவார்.
8)தம்முள் பாவம் ஏற்பட்டால் தந்தை ஈசனிடம் உடனடியாக கூறிவிடவேண்டும். இல்லா விட்டால் அந்தப் பாவம் விருத்தியாகும். பாவம் சுமையாக மாறும்பொழுது நமது வாழ்க்கை என்ற வண்டி அதை இழுக்க முடியாமல் பழுதாகிவிடும். எல்லாவற்றிற்கும் நாமே காரணம் என உணர்வதே தன்னை மஹானாக ஆக்கி கொள்வதாகும். நான் இறைவன் மூன்றாவது யாரும் இல்லை. எக்காலமும் இறைவன் என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றார் இது தான் பாவம் செய்யாமல் இருப்பதற்கான வழியாகும். ஆனால் இந்த நினைவை மறக்கடிப்பது தான் மாயையின் வேலையாகும்.
9) நமக்குள் விழிப்புணர்வு இல்லாத வரை நாம் பலவீனமாகவே இருப்போம். விழிப்புணர்வு என்பது மாயையிடம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதாகும். மாயையிடம் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நமக்கு துணையாக இருப்பவர் தந்தை ஈசனைத் தவிர வேறொருவரில்லை. எனவே தன்னை தந்தை ஈசனுடைய சேவையில் ஈடுபடுத்திக் கொள்பவர் மாயை தாக்காத பாதுகாப்பு கவசத்தில் இருப்பவர் ஆவார்.
10) பிறரை அலட்சியம் செய்பவரிடம் ஆணவம் இருக்கும். ஆணவம் இருக்குமிடத்தில் ஆசை இருக்கும். ஆசை அனைத்து தீமைகளையும் கொண்டுவரும். நமது மன ஆசைகள் யாவும் தூய்மையானால் அனைத்தும் தூய்மையாகி விடும். தூய்மையான எண்ணம் மனதிற்கு போஜனம். தூய்மையான வார்த்தைகள் புத்திக்கு போஜனம்.தூய்மையான செயல்கள் சுபாவத்திற்கு போஜனம்.இந்த போஜனத்தை யார் உண்கின்றார்களோ அவர்களே உலகில் போஜ மகாராஜா போல ஆகிவிடுகின்றார்கள். நல்லது. வாழ்த்துக்கள். ஓம் சாந்தி.




