தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சியினருக்கு அதிகாரப் பகிர்வு நிச்சயம் உண்டு என தெரிவித்ததுதான் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இதன் விளைவாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தவெக தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என பேசியுள்ளார். ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். உங்கள் (ஸ்டாலின்) தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது என தமிழக மக்களும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.




