Oplus_131072
பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது:
என் தாத்தா என் அப்பாவிடம் அழகிய புவியை ஒப்படைத்து சென்றார். அவரிடம் செல்வம் குவிந்திருந்த போதும் மண் வீட்டில்தான் வாழ்ந்தார். பெரும்பாலும், மானாவாரி உணவுவகைகளையே உண்டு வாழ்ந்தார். ஏன் குடிசையில் வாழ்கிறோம், ஏன் மானாவாரி நிலத்தில் விளைந்த உணவு வகைகளை உண்கிறோம் என்று தெரிந்து செய்தார். ஆனால், என் அப்பா படித்த கல்வி மேலைநாட்டு நாகர்ரிகம் நோக்கி ஈர்த்தது.. வானுயர்ந்த கோபுரங்கள், பெரிய கட்டமைப்புகள்தான் வளர்ச்சி என்றது. என் அப்பா அதை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். இயன்ற வரை இயற்கையை சுரண்டாமலும் இருந்தார்.
ஆனால், நாங்கள் வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கத்திற்குள் நுழைந்தோம். வளர்ச்சி என்ற பெயரால் எங்களுக்கு எதுவெல்லாம் காட்டப்பட்டதோ, அவை அனைத்தையும் நம்பினோம். பொருள் வாங்கி குவிப்பதுதான் கௌரவம் என்று சொல்லப்பட்டது. அதனால், அனைத்தையும் வாங்கி குவித்தோம். வாழ்வதற்காக அல்லாமல் வாங்குவதற்காக உழைத்தோம். ஒருவருக்கு இரண்டு கைபேசிகள், நான்கு காலணிகள், நாற்பது சட்டை பேண்ட்கள் என வாங்கி குவித்தோம்.
ஒரு நாள் நாங்கள் வாங்கி குவித்த பொருட்கள்தான், இந்த புவிக்காக எமன் என்று புரிந்தது. எந்த அறிவியல் எங்களை அதிகம் நுகர சொல்லி தூண்டியதோ, அதே அறிவியல் இப்போது சொல்கிறது, ஒரு ஜீன்ஸ் தயாரிக்க ஒன்பதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும், ஒரு ஜோடி காலணி தயாரிக்க இருபதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும்.
ஆனால், இது எங்களுக்கு தெரிய வந்த போது நிலைமை படு மோசமாகிவிட்டது. ஒரு சொட்டு தண்ணீருக்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக சாவுகள் விழத் துவங்கிவிட்டது. சொல்லப்போனால், எம் தலைமுறைக்கே இயற்கையான தண்ணீரின் சுவை எப்படி இருக்கும் என்றே தெரியாது. எங்கள் டி. என். ஏவில் படிந்து இருப்பதெல்லாம் செயற்கை நீரின் சுவை மட்டுமே. பாட்டில் நீரின் சுவை அது.




