தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆண்டுதோறும் நிரப்பி வருகிறது. மேலும், நடப்பாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த ஆண்டு திட்ட அட்டவணையானது, மூன்று மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்ததால் தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தனர். அந்தவகையில், நேற்று 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட அட்டவணையானது வெளியிடப்பட்டு, தோராயமாக 7,535 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான 1915 காலிபணியிடங்கள் நிரப்பப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, “வருகின்ற ஆகஸ்ட் மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, வருகின்ற நவம்பர் மாதம் தேர்வுகள் நடைபெறும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “பட்டதாரி ஆசிரியருக்கான 1205 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றும், இதற்கு “வருகின்ற செப்டம்பர் மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வுகள் நடைபெறும்” என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.




