உடனே மனது ஏற்காது தான். ஆனாலும் உண்மை என்றும் உண்மை தான்.
நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகு உயிரோடு இருக்கப் போவதில்லை.
போகும்போது எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதும் இல்லை
ஆகவே சிக்கனமாக இருங்கள். ஆனால் கஞ்சத்தனமாக இருக்காதீர்கள்.
செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தானதர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப்படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
நாம் இறந்தப் பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்து விடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டு விடும்.
உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படி தான் அமையும்.
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச்சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். பணத்தை விட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சனை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்றவும் முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும் தான் கெடும்.
நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் சூழ்நிலையை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைவரோ மற்றவர்களோ ஏற்படுத்தித் தர இயலாது.
மன மகிழ்ச்சி தான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை!
உற்சாகத்தோடு இருக்கும் போது தான் நோய் நொடிகள் குணமாகும்.
அனுதினமும் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டவே அண்டாது. இது உறுதி
நல்ல மகிழ்ச்சியான மனநிலை (வெளியே தேடினால் கிடைக்காது. உங்களுக்குள் நீங்களாக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்), அரைமணிநேரம் உடற்பயிற்சி, மாலை சூரிய ஒளி, சத்தான இயற்கை உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை ஆரோக்கியமாக வாழ வைக்கும்!
அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவற்றையும், இருப்பதையும் நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதுவே உங்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கள், உண்மையான
நண்பர்கள் என்ற பெரிய வட்டத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்.
அவர்கள் தான் உங்களை இளைமையாகவும், அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக் கொள்வார்கள்.




