Oplus_131072
பெண்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக இருக்க குங்குமம் இட்டுக் கொள்ளும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்.
ஆயுசுக்கும் சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதும், தன்னுடைய கணவரும், குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதும், இல்லறம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதும் தான் திருமணம் ஆன எல்லாத் பெண்களுடைய வேண்டுதலாகவும் ஆசையாகவும் இருந்து வருகின்றது.
இதை நிறைவேற்றிக் கொள்ளவே அனுதினமும் பெண்கள் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
இந்த வேண்டுதல் நிறைவேற பெண்கள் அம்பாளை எப்படி வழிபட வேண்டும்.
குங்குமத்தை முறையாக எப்படி இட்டுக் கொள்ள வேண்டும். குங்குமத்தை இட்டுக் கொள்ளும் போது எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான சில குறிப்புகளைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மாதம்தோறும் வரக்கூடிய பவுர்ணமி அன்று உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் அம்மன் கோவில்களுக்கு சென்று, உங்கள் கைகளால் குங்குமத்தை வாங்கிக் கொடுத்து, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தினம் தினம் நீங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளக்கூடிய குங்குமம், அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்ட இந்த குங்குமமாகத் தான் இருக்க வேண்டும். இது வீட்டிற்கு நல்ல சுபிட்சத்தை தேடித்தரும்.
கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது.
இந்த பூஜையை பவுர்ணமி தினம், அல்லது வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் செய்யலாம்.
தினமும் பெண்கள் முதலில் குங்குமத்தை தங்களுடைய திருமங்கலத்திற்கு இட்டுக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். மூன்றாவதாகத் தான் வகிட்டில் இட்டுக்கொள்ள வேண்டும்.
முதலில் திருமங்கல்யத்திற்கு இட்டுக் கொள்ளும் போது பெண்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம்.
மந்திரம்
‘ஓம் தீர்க்க சுமங்கலி தேவியை,
இரட்சிப்பாய் இரட்சிப்பாய்!’
இரண்டாவதாக நெற்றிப் பொட்டில் குங்குமம் இட்டுக் கொள்ளும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்.
மந்திரம்
‘ஓம் மஹிமா சக்தியை திலக தேவியை பூரண சக்திதா நமோ நமஹ’
மூன்றாவதாக நெற்றி வகிட்டில் வைக்கும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்.
மந்திரம்
‘ஓம் யாதேவி சர்வ பூதேஷு
ஸ்ரீம் ஐம் க்லீம் சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
யோகம் இரட்சிப்பாய் இரட்சிப்பாய் நமோ நமஹா!’
தினமும் பெண்கள் தங்களுடைய திருமாங்கல்யம், நெற்றிப் பொட்டு, வகிடு, இந்த மூன்று இடங்களில் குங்குமத்தை இட்டுக் கொள்ளும் போது மேல் சொன்ன மந்திரங்களை மூன்று முறை உச்சரிப்பது மிகவும் சிறப்பான ஒரு விஷயம்.
பூஜை செய்து எடுத்து வைத்த குங்குமத்தை பெண்கள் தங்களுடைய வலது கை மோதிர விரலால் தொட்டு தினமும் இட்டுக் கொண்டால், ஆயுசுக்கும் தீர்க்க சுமங்கலியாக வாழலாம். அவர்களுடைய வீட்டில் சுபிட்சம் நிலைத்து நிற்கும்.




