படித்ததில் பிடித்தது: மனைவியின் அருமை இது தான்..!!

மனைவியின் அருமை..!

 

கணவனை இழந்த மனைவியை விடவும்

மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான்.

 

காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.

 

ஆனால்

மனைவியை இழந்த கணவன்…

 

தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை

தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை

நோய்படும் போது தானும் நோகும் தாயை

இழக்கிறான்.

 

ஒரு மனைவி எத்தனை உருவம் எடுக்கிறாள்?

 

கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்.

 

ஊர் , பெயர் , முகவரி , வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் மற்றும் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள்.

 

தான் கண்ட கனவுகள் அனைத்தையும்

கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள்.

 

வீட்டின் வேலைக்காரியாக ,

சலவைக்காரியாக,

சமையல்செய்பவளாக,

கணக்குப்பிள்ளையாக

பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்…

 

அவள் இருக்கும் வரை

இத்தனை வேலைகள் யார் செய்தார் என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதேயில்லை.

 

பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும்.

 

பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும் .

 

கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாடலில் அருமையாக எழுதியிருப்பார்…

 

” காதலி அருமை பிரிவில்

மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை கோடையிலே”…

 

ஆம்.. மனைவியின் அருமையை அவளது மறைவில் தான் ஆடவன் உணர்கிறான்.

 

மனைவியை இழந்து தவிக்கும் கணவர்களையும்…

 

கணவர்களை இழந்து வாடும் மனைவிகளையும் தினந்தோறும் சந்திக்கிறோம்.

 

கணவனை இழந்த மனைவியர் நினைவுகளை அசை போடுவார்கள். நல்ல நினைவுகளை கூறுவார்கள்.

 

மனைவியை இழந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் தியாகங்களை எடுத்துக்கூறி புலம்புவார்கள். “இன்னும் நல்லா கவனிச்சி இருக்கலாம் சார் அவள.. இப்டி சரியா பாக்காம விட்டுட்டேனே சார்”. என்று அழுது புலம்புவார்கள்.

 

கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணமும் மனவலிமையும் கிடைத்து விடுகிறது.

 

ஆனால் மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனதை போன்று தான் இருக்கிறார்கள்.

 

தனது சுக துக்கம்

இன்ப துன்பம்

தோல்வி வெற்றி

அனைத்திலும் கூடவே இருந்து தன்னை சகித்து வாழ்ந்த தனது மனைவி இறக்கும் போது ஒவ்வொரு ஆடவனும்

இறந்தே தான் விடுகிறான்.

 

அதற்குப்பிறகு அவனுக்கென்று எதையும் பெரிதாய் அவன் யோசிப்பதில்லை.

 

அவரவர் மனைவியை அவள் உயிரோடு இருக்கும் போதே முடிந்தவரை நேசிப்போம்.

 

அவள் இல்லாத போது அசை போடவும் புசித்து வாழவும் நினைவுகள் தேவையன்றோ …..

 

கைம்மை என்றால் துணையை இழந்த கையறுநிலை. துணைவனை இழந்தவள் கைம்பெண்.

 

அவ்வாறே துணைவியை இழந்தவன் கைம்மகன் அல்லது கைம்மான்.

 

மனைவியை இழந்த ஆண் ஒருவன் மீண்டும் மணம் முடிக்காதிருப்பின் அவன் தபுதாரன் என்று அழைக்கப்படுவான்.

 

தமிழ் மொழியின் பொருள் இலக்கணத்தை விளக்குகின்ற “புறப்பொருள் வெண்பா மாலை” என்னும் நூல், மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழும் நிலையை “தபு-தார நிலை” என்கிறது.

 

“தபு” என்றால் “இறத்தல்” என்றும், “தாரம்” என்றால் “மனைவி” என்றும் பொருள்.

தபுதாரன் என்பவன் மனைவியை இழந்தவன்.

 

சான்றாக,

பைந்தொடி மேல்உலகம் எய்தப் படர்உழந்த

மைந்தன் குரிசில் மழைவள்ளல் – எந்தை

தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலைமை கேளாச்

செவிடாய் ஒழிக என் செவி

எனும் பாடல் அமைகிறது. இப்பாடல், தன் மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல், அவள் நினைவால் வருந்திப் புலம்பும் நிலை பண்டைக்கால ஆடவரிடம் நிலைபெற்றிருந்ததை எடுத்துரைக்கிறது.

 

பின்னர் நிகழ்ந்த கால மாற்றத்தின் காரணமாக அந்நிலை மாறி, “பெத்த அம்மா செத்தா; பெத்த அப்பன் சித்தப்பன்” என்ற பழமொழிக்கேற்ப ஆடவர்கள், மனைவி இறந்தவுடன் பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன் இருக்கும்போதே பல தாரங்களை மணந்து கொண்டதாலும் “தபுதாரன்” என்ற இச்சொல் வழக்கொழிந்து போய்விட்டது.

 

ஆகையால், கைம்பெண் என்ற சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல் “தபுதாரன்” என்பதாகும்.

Read Previous

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி?.. நல்ல ஆலோசனை..!!

Read Next

படித்ததில் வலித்தது: ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டியது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular