தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, 1-ம் வகுப்பில் மட்டும் 2 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அதேபோல், தொடக்க நிலை வகுப்புகளான LKG மற்றும் UKG வகுப்புகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதலாக சுமார் 24 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளதாகவும் தொடக்க கல்வித்துறை கூறியுள்ளது.
அரசு பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகள், கற்றல் முறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட காரணங்களால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை அதிகளவில் தேர்வு செய்து வருவதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, அரசு பள்ளிகளின் மீதான பெற்றோர்களின் நம்பிக்கை உயர்ந்து வருவதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.




