Oplus_131072
♥விவாகரத்து கேட்கிறாள் அம்மா
♥மருமகனோடு மகளும்..
மருமகளோடு மகனுமாய்
சூழ்ந்து நின்ற ஒருநாளில்..
அதிரடியாய் அம்மா சொன்னாள் தனக்கு
விவாகரத்து வேண்டுமென..!!
♥ஆளாளுக்கு தங்கள் அனுமானங்களையும்…
கேள்விகளையும். ஆயுதமாய் எடுக்க…
ஆடிப்போய் அதிர்ச்சியில்
வாயடைத்து நின்றிருந்தார் அப்பா…!!
♥ஊருக்குள் ஜமீன்தார் போல
வாழ்ந்து வந்த அப்பா..
ஏழையான அம்மாவை..
அழகைப் பார்த்து
வரதட்சனை ஏதுமின்றி
மணந்து கொண்டாராம்…!!
♥மணமான நாளுக்கு மறுநாளே
வீட்டில் பணியாட்கள்
நிறுத்தப்பட்டனராம்…
அன்று முதல் இன்று வரை
அடுப்படி முதல் தோட்டம் வரை
அத்தனை வேலைகளையும்
தனியாளாய் செய்து…
ஓடாய் தேய்ந்து போனேன்
என்றழுதாள்…!!
♥அன்பாய்..அனுசரணையாய்
ஒருநாளும் இருந்திராத
அவரிடம்..ஏனிப்படி எனக்கேட்டபொழுது…
‘உனக்கெல்லாம் கல்யாணம் ஆனதே பெரிய விஷயம்’
அன்பு வேணுமாக்கும் என
எரிந்து விழுந்தாராம்…
அப்பொழுது நான் வயிற்றில்
இருந்தேனாம்…!!
♥தன் குடும்பத்து ஆட்களின் முன்பாக மிகவும் கேவலமாய் பேசி..
அவமானப் படுத்துவாராம்…
தனது ஒன்றுவிட்ட சகோதரிகளின் முன்பாக… அவர்களை குஷிப்படுத்த…
பிள்ளை பெற்று 15 நாட்களே ஆன பச்சை உடம்புக்காரியை பின்புறமாய் எட்டி உதைத்தாராம்… குரல் ததும்ப
அம்மா சொல்லிக்கொண்டிருக்க
எனக்கு வலித்தது…!!
♥இத்துன்பங்களோடு போராடுகையில் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறாள்…
உணவு,உடை..குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு என அனைத்துக்குமாய்… அவரது அம்மா மற்றும் தங்கையிடம் கையேந்த
வைத்தாராம்…!!!
♥கட்டிலுக்கும்..தொட்டிலுக்கும் மட்டுமே என… உயிரற்ற ஐடமாய் வைத்திருந்தார்…!!
♥உங்க ரெண்டு பேரையும்
தனியா ஆளாக்கற சக்தி
எனக்கில்லாததால்தான்
இத்தனை வருடங்களாய்
இவற்றையெல்லாம்
பொறுத்துக் கொண்டேன் என்றாள்…எனக்கு குற்றவுணர்ச்சி மேலோங்கியது…!!
♥”உங்களுக்கெல்லாம் கல்யாணமாகிடுச்சு..இனி உங்களைப்பற்றிய கவலை
எனக்கில்லை…
♥முதியோர் இல்லத்தில் எனக்காக ஒரு இடம் காத்திருக்கிறது..
மீதமிருக்கும் நாட்களை
நான் எனக்குப்பிடித்தமாதிரி
வாழனும்…புத்தகம் படிக்கனும்…இசை கேட்கனும்..
என் வயசுக்காரங்களோட
தோழமையா பழகனும்..
தயவு செய்து என்னை தடுக்காதீங்க”
♥கண்ணீரோடு கைகூப்பி நின்ற அம்மாவை தேற்றுவதா..தடுப்பதா…
என்றறியாமல்… அனைவரும் திகைத்து நிற்க… அம்மா வாசலைக்கடந்து…
வெளியேறிக்கொண்டிருந்தாள்…!!
(யாவும் கற்பனையே… )
இறுதி மூச்சு வரை ஓய்வின்றி உழைக்கும் அம்மாக்களுக்காக….




