ஹூலிஹான் லோகி வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ஒட்டுமொத்த வணிக மதிப்பு 11.4 சதவீதம் உயர்ந்து, ரூ.1.97 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு லீக்களில் ஐபிஎல் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அணிகளின் பிராண்ட் மதிப்பீட்டில், விராட் கோலி விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ரூ.2,986 கோடி பிராண்ட் மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
மறுபுறம், சமீபத்திய சீசன்களில் ஏற்பட்ட தொடர் பின்னடைவுகள் மற்றும் செயல்திறன் சரிவு காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,335 கோடியாக பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, சிஎஸ்கே அணி பிராண்ட் மதிப்பீட்டில் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது என்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் வணிக வளர்ச்சியும், அணிகளின் பிராண்ட் மதிப்பும் ஆண்டுதோறும் உயர்ந்து வருவது, உலக கிரிக்கெட்டில் இந்தத் தொடரின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.




