கோடை காலங்களில் மண்ணில் இருந்து நீர் ஆவியாவதும் (Evaporation), மரங்கள் செடி கொடிகளில் இருந்து நீராவிப்போக்கு (Transpiration) நடைபெறுவதும் அதிகமாக இருக்கும், இதனால் நிலத்தின் மேல்மண்ணில் நீரின் அளவு குறைவதோடு செடிகளும் அதிக நீர் உறிஞ்சி வெளியேற்றும் இதனால் ஊற்றும் நீர் மண்ணில் விரைவாக காய்ந்துவிடுகிறது.
செடிகள் தண்ணீர் பற்றாக்குறையால் வாடிவிடுகின்றன. தொடர்ந்து நீர் கொடுக்காமல் விட்டால் செடி இறந்துவிடும், அல்லது நுனி இலைகள் கருகிவிடும், நுனி இலைகள் கருகிவிட்டால் மீண்டும் புது தளிர்கள் வந்து செடி மீண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகும். எனவே கோடைகாலத்தில் கவனமாக நீர் மேலாண்மை அவசியம்.
*தண்ணீர் குழாய்களை பராமரிக்கவும்*
கோடை காலத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு நாள் தண்ணீர் விட தாமதமானாலும் கன்றுகள் வாடிவிடும் என்பதால் தண்ணீர் குழாய்கள், டிரிப், வென்சுரி போன்றவற்றை சரியாக பராமரிக்கவும்.
*மின் மோட்டார்களை பராமரிக்கவும்*
மின் மோட்டாரில் ஏற்படும் பழுதும் தண்ணீர் கொடுப்பதை பாதிக்கும் என்பதால் மின்மோட்டார் சரியாக உள்ளதா என்பதை கவனிக்கவும், ஏனெனில் கோடைகாலத்தில் ஒரு நாள் தண்ணீர் இல்லை என்றாலும் செடிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பகுதியில் எப்பொழுது மின்சாரம் ஷட்டௌன் (Shutdown) செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளவும்.
*பணியாளர்களை கண்கானிக்கவும்*
கோடைகாலங்களில் பணியாளர்கள் சரியான முறையில், சரியான நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கிறார்களா என்று கவனிக்கவும். பணியாளர்கள் செய்யும் சிறு தவறும் செடிகள் இறப்புக்கு காரணமாகும். சில நேரங்களில் சரியாக செடிகளுக்கு தண்ணீர் கொடுக்காமல் வெய்யிலால் செடிகள் காய்ந்துவிட்டது என்று சொல்ல வாய்ப்பு உள்ளது.
*தண்ணீர் அளவு*
கோடைகாலங்களில் மரங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுப்பது உகந்தது. சராசரியாக 1-3 வயது மரக்கன்றுகளுக்கு வாரத்திற்கு 10 – 12 லிட்டர் தண்ணீர் தேவை என்றால், அதிக கோடை காலங்களில் 15 – 18 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். இந்த தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என பிரித்து கொடுக்கலாம்.
*காலையில் தண்ணீர் கொடுப்பது உகந்தது*
கோடை காலங்களில் இளம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் கொடுக்கும்போது காலையில் வெய்யில் ஏறுவதற்கு முன்பே தண்ணீர் கொடுப்பது உகந்தது. இதனால் பகல் வெய்யிலை கன்றுகள் தாங்கி நிற்கும். மாலையில் தண்ணீர் கொடுத்தால் தண்ணீர் இரவில் வெப்பக் காற்றால் ஆவியாகி பகலில் மண் வறண்டுவிடும்.
*மூடாக்கு*
கோடைகாலத்தில் மரக்கன்றுகளுக்கு மூடாக்கு மிகவும் அவசியமாகும்.



