தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில் சுமார் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு தோறும் சென்று குடும்ப விவரங்கள் மற்றும் குடியிருப்புகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
கணக்கெடுப்பின் போது, வீடுகளின் எண்ணிக்கை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் குடும்பம் தொடர்பான மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தகவல்கள் அரசின் திட்டமிடல், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை துல்லியமாக செயல்படுத்த உதவும் முக்கிய தரவுகளாக பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே சுய கணக்கெடுப்பு (Self Enumeration) முறையில் இணையதளம் வாயிலாக தகவல்களை பதிவு செய்தவர்கள், கணக்கெடுப்பு அலுவலர் வரும்போது அதற்கான இணைய பதிவு விவரத்தை மட்டும் காண்பித்தால் போதுமானது. இதனால் மீண்டும் அதே விவரங்களை வழங்க வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும், 1948ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என்றும், தனிநபர் தகவல்கள் வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் சரியான தகவல்களை வழங்கி கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




