மணக்க மணக்க காளான் பிரியாணி: வீட்டிலேயே செய்வது எப்படி?..

 

பிரியாணி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். பொதுவாக பிரியாணி சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில், இறைச்சி இல்லாமல் சுவையான, மணம் நிறைந்த காளான் பிரியாணியை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடலாம். காளானின் தனித்துவமான சுவையும், மசாலா பொருட்களின் மணமும் இணைந்து இந்த பிரியாணியை மிகவும் சுவையாக மாற்றுகிறது.

தேவையான பொருட்கள்

  • பாசுமதி அரிசி – 2 கப்
  • காளான் – ½ கிலோ
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • தேங்காய் பால் – ½ கப்
  • தயிர் – 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 2 ஸ்பூன்
  • சோம்பு தூள் – ½ ஸ்பூன்
  • பட்டை – 2 துண்டு
  • ஏலக்காய் – 3
  • கிராம்பு – 5
  • பிரியாணி இலை – 1
  • எண்ணெய் – தேவையான அளவு
  • நெய் – தேவையான அளவு
  • புதினா இலை – ஒரு கைப்பிடி
  • கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
  • தண்ணீர் – 3 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் காளானை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து நன்றாக தாளிக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை சமைக்கவும்.

இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.

பின்னர் காளான் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும். அதனுடன் தேங்காய் பால், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.

அடுத்து ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து, 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.

அரிசி நன்றாக வெந்து மணம் வரும் வரை சமைத்து இறக்கவும். சிறிது நேரம் மூடி வைத்து பின்னர் திறந்தால் சுவையான, மணக்க மணக்க காளான் பிரியாணி தயார்.

இந்த காளான் பிரியாணியை வெங்காய ரைத்தா, தயிர் பச்சடி அல்லது குருமாவுடன் பரிமாறினால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.

 

Read Previous

ஆரஞ்சு தோலை வீணாக்காதீர்கள்: சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular