தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நேற்று (அக்டோபர் 25) காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இடைவிடாது 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், வேலைக்கு சென்று வீடு திரும்பும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கனமழையால் ஆலங்குளம் கண்மாய் நிரம்பி முல்லைநகர் பகுதி வெள்ளக்காடானது. மேலும் மதுரை மாநகரில் 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 10 செமீ அதிகனமழை கொட்டித்தீர்த்துள்ளது.




