லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்று (19-05-2025) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205 ரன்கள் குவித்த நிலையில் பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவரில் 206 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
மேலும், இப்போட்டியின் போது லக்னோ சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது “திக்வேஷ் சிங் ரதி தனது வழக்கமான நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மிகவும் ஆக்ரோஷமாக அபிஷேக் சர்மாவை மைதானத்தை விட்டு வெளியேற கூறி சைகை காட்டினார். இதனால் திக்வேஷ் சிங் ரதிக்கும், அபிஷேக் சர்மாவுக்கும் இடையே மோதல் உருவானது”. இந்நிலையில் “திக்வேஷ்க்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது மட்டுமின்றி மே 22 ஆம் தேதி நடக்கவுள்ள குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, அபிஷேக் சர்மாவுக்கும் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.




