பிரியாணி என்றால் அது அசைவத்தை மட்டும் வைத்து செய்யவேண்டிய அவசியமில்லை. சைவத்தைக் கொண்டும் செய்யலாம்.
அதிலும் குறிப்பாக காலிஃப்ளவரை வைத்து பல்வேறு ரெசிபிக்களை செய்யலாம்.
இனி காலிஃப்ளவரை வைத்து எவ்வாறு பிரியாணி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய காலிஃப்ளவர் – 1 கப்
பாசுமதி அரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2
தக்காளி – 2
சோள மா – கால் கப்
அரிசி மா – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
தனியாத் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 1
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 1
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான
அளவு உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவிவிட்டு அரை மணிநேரம் ஊறவைத்த பின்னர் நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நன்றாக கொதித்த நீரில் காலிஃப்ளவரை போட்டு 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் காலிஃபளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரிசி மா, சோள மா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மசாலா கலந்த காலிஃப்ளவரை பொரித்தெடுக்கவும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்விட்டு சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை என்பவற்றை போட்டு தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதன் பின்னர் அதில் தக்காளி, இஞ்சி வெள்ளைப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பின்னர் தனியாத் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இறுதியாக நெய்யில் வறுக்கப்பட்ட அரிசியைச் சேர்த்து தண்ணீர் விட்டு பொரித்து, வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.




