Oplus_131072
நம்பியவரை கைவிடாதீர்கள்…!
பாரத போருக்கு பின் நீண்ட காலம் நாட்டை ஆண்ட தர்மர் இறந்து போனார்.
அவர் சொர்க்கத்திற்கு நடந்து சென்றார். செல்லும் வழியில் ஒரு நாய் வந்தது. அது தர்மரின் பின்னாலேயே சென்றது. சொர்க்கவாசல் அருகே வந்ததும் இந்திரன் தர்மரை வரவேற்றான்.
தர்மர் இந்திரனிடம், “தேவேந்திரா நான் மட்டுமல்ல, இதோ இந்த நாய் என்னை நம்பி பின் தொடர்ந்து இங்கே வந்துவிட்டது. இது யார் வீட்டு நாய் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் என்னை நம்பி வந்துவிட்டது. என்னுடன் இதையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இந்திரன் மறுத்தான்.
“கேவல ஜென்மமான நாயை அனுமதிக்க முடியாது” என்றான்.
தர்மர் அவனிடம், “அப்படியா! மிக்க மகிழ்ச்சி. என்னை சரண் அடைந்த இந்த நாய்க்கு இங்கு இடம் இல்லை என்றால் எனக்கும் இந்த சொர்க்கம் தேவை இல்லை நான் மீண்டும் பூமியிலேயே பிறக்கிறேன்,” என்றும் சொல்லிவிட்டார்.
இந்திரனுக்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது. இதற்கு மேலும் சோதிக்க விரும்பாத அந்த நாய் எமதர்மராஜாவாக வடிவெடுத்தது.
“தர்மா, என் அன்பு மகனே! உலகத்து உயிர் ஒவ்வொன்றின் மீதும் நீ கொண்ட அன்பை வெளிப்படுத்தவே நான் நாயாக உருமாறி உன் பின்னால் வந்தேன்,” என்றார்.
பார்த்தீர்களா! ஒரு நாய்க்கு கூட தர்மர் அன்புடன் மரியாதை கொடுத்தார். மனிதனோ ஒருவருக்கு ஒருவன் உதவாமல் இருக்கிறான்.
இனியாவது எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்த பழகுவோமே.!.




