வீட்டில் இருந்தாலே ‘படி படி’ எனக் கூறி, தனது தாயார் தொல்லை செய்வதாக 11 வயது சிறுவன் போலீஸில் புகார் அளிக்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறு சொல்லையும், சாதாரண கண்டிப்பையும் கூட தாங்க முடியாத மனநிலை கொண்டவர்களாக இன்றைய தலைமுறை பிள்ளைகள் இருப்பதை பார்க்க முடிகிறது. 90-கள் வரையிலான காலக்கட்டத்தில் இருந்ததை போன்ற கண்டிப்பை, இப்போது பள்ளிகளில், ஏன் வீடுகளில் கூட காண முடிவதில்லை. இப்படியான சூழலில் வளர்வதால், ஒரு கட்டத்தில் பெற்றோராகவே இருந்தாலும், தங்கள் சுதந்திரத்தில் தலையிட கூடாது என பிள்ளைகள் நினைக்கும் அளவுக்கு வந்துவிட்டனர்.
இதனை மெய்ப்பிக்கும் விதமாக, ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. விஜயவாடாவில் உள்ள குலாபிஹோடா பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் ஒருவன், அங்குள்ள சத்யநாராயணபுரம் காவல் நிலையத்திற்கு நேற்றிவு சென்றான்.
சிறுவன் ஒருவன் காவல் நிலையத்திற்கு வருவதை பார்த்த போலீசார், அவனை அழைத்து சென்று அமர வைத்தனர். பின்னர், இன்ஸ்பெக்டரிடம் அவனை அழைத்துச் சென்றனர். இன்ஸ்பெக்டரிடம் அந்த சிறுவன் சிறிதும் தயக்கமின்றி, “என் அம்மா எப்போது பார்த்தாலும் வீட்டில் படி படி என்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என கோபமாக கூறியுள்ளான்.
சிறுவனின் பேச்சை சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்ட காவல் ஆய்வாளர், அடுத்த நிமிடமே அவரது தாயாரின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் அந்த சிறுவனின் குடும்ப சூழல் பற்றி அவருக்கு தெரிய வந்தது.
அந்த சிறுவனின் தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதன் பின்னர், 2 பிள்ளைகளையும் தனியாகவே இருந்து கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார் அவரது தாய். இதற்காக ஒரு கடையில் இரவு பகலாக வேலை செய்து, அதில் கிடைக்கும் சிறிய அளவு சம்பளத்தை வைத்து பிள்ளைகளை பராமரித்து வருகிறார்.
வறுமை காரணமாக தனது மூத்த மகனையும் கடை வேலைக்கு அனுப்பிவிட்டு, இரண்டாவது பிள்ளையை மட்டும் தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். அவனது படிப்புக்கு தேவை என்பதற்காக செல்போனையும் வாங்கி தந்துள்ளார்.
ஆனால், அந்த சிறுவனோ செல்போனை படிப்புக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, அதில் விளையாடுவதையும், படம் பார்ப்பதையுமே முழுநேர வேலையாக செய்து வந்திருக்கிறான். இந்த ஆத்திரத்தில் அவனை கண்டித்ததால், சிறுவன் நேராக காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்திருக்கிறான்.
அவனது தாயாரிடம் பேசிய இன்ஸ்பெக்டர், பின்னர் சிறுவனை அழைத்து, தன்னந்தனியாக கஷ்டப்படும் உன் தாயையும், குடும்ப சூழலையும் எண்ணிப் பார்த்து நன்றாக படிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமாக நடந்து கொள்ளுமாறும் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார்.




