கர்நாடகாவின் காவிரி வனப்பகுதியில் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடியதாக கூறப்படும் கும்பல் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி, பீட்டர், குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஹனூர் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.




