இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கான ஆள்சேர்ப்பின் இரண்டாம் கட்டமாக, உடற்தகுதித் தேர்வு முகாம் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இணையவழி நுழைவுத் தேர்வில் (Online Common Entrance Exam) தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்த ஆள்சேர்ப்பு முகாம், ஆகஸ்ட் 1 முதல் 10 வரை புதுச்சேரியில் நடைபெறும் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
சென்னை மண்டலத் தலைமையகம் நடத்தும் இந்த முகாமில், தமிழ்நாட்டின் 11 மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் பங்கேற்க உள்ளனர்.
எனவே, இணையவழி தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்கள் இரண்டாம் கட்ட உடற்தகுதித் தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு, தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் ஆஜராகுமாறு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.




