தஞ்சை: சுமார் 75 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவித்த கீழப்புனல்வாசல், வாடிக்காடு, ராமகிருஷ்ணபுரம் கிராம மக்களுக்கு தமிழக அரசின் விடியல் பயண பேருந்து நேற்று (அக்.13) முதல் முறையாக இயக்கப்பட்டது. மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனல்வாசல் நான்குசாலைக்கு சென்று பேருந்து ஏற வேண்டிய அவலநிலை முடிவுக்கு வந்துள்ளது. எம்எல்ஏ என். அசோக்குமார் அளித்த உறுதியைத் தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை விரிவாக்கம் மற்றும் பாலங்கள் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டனர்.




