முட்டை என்பது குறைந்த விலையில் எளிதில் கிடைக்கும், அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் உயர்தர புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளன.
முட்டையில் உள்ள புரதம் உடல் தசைகளின் வளர்ச்சிக்கும், செல்களின் சீரமைப்புக்கும் உதவுகிறது. மேலும், எலும்புகளின் வலிமை, சரும ஆரோக்கியம் மற்றும் உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
வழக்கமாக செய்யும் முட்டை குழம்பு, முட்டை பொரியல் போன்றவற்றிற்கு மாற்றாக, தாபா பாணியில் மசாலா சுவை நிறைந்த முட்டை பட்டாணி மசாலாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்து பார்க்கலாம். பட்டாணியின் இனிப்பு சுவையும், முட்டையின் சுவையும் இணைந்து இந்த உணவை மிகவும் ருசியாக மாற்றுகிறது.
தேவையான பொருட்கள்
முட்டையை வறுக்க:
- வேகவைத்த முட்டை – 6
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
- காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
மசாலா தயாரிக்க:
- நெய் – 2 ஸ்பூன்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் – 1 கப்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- நறுக்கிய பச்சை மிளகாய் – 2
- அரைத்த தக்காளி விழுது – 1 கப்
- மல்லித் தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- சீரகத் தூள் – ½ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கடலை மாவு – 1 ஸ்பூன்
- வேகவைத்த பச்சை பட்டாணி – ½ கப்
- கசூரி மேத்தி – 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் – ½ ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேகவைத்த முட்டைகளின் ஓட்டை நீக்கி, அதன் மேல் லேசாக கீறல்கள் போடவும். இதனால் மசாலாவின் சுவை முட்டைக்குள் நன்றாக ஊறும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் முட்டைகளை சேர்த்து அனைத்து பக்கங்களிலும் லேசாக பழுப்பு நிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கிளறி, தக்காளி நன்கு சமைந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும்.
மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும், வேகவைத்த பச்சை பட்டாணி, வறுத்த முட்டைகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பாத்திரத்தை மூடி வைத்து மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இடையிடையே கிளறி, பட்டாணி மற்றும் முட்டையில் மசாலா நன்றாக கலக்கும்படி செய்யவும்.
இறுதியாக கசூரி மேத்தி, கரம் மசாலா தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, மேலே நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சூடான சாதம், சப்பாத்தி, ரொட்டி அல்லது நாண் உடன் பரிமாறினால் தாபா சுவையில் அசத்தலான முட்டை பட்டாணி மசாலா தயார்.




