தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரை அவரது கட்சி பதவியுடன் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அந்த அறிக்கையில், “அதிமுக துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்துவார்” என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதாகவே தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு, துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டாம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பெயரையும் அவரது கட்சி பதவியுடன் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்பான பதவி விவகாரங்களில் அதிமுக தலைமை தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவது, கட்சியின் உள்நிலை அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




