Oplus_131072
சமீபத்தில் முடி திருத்தும் நிலையத்திற்கு சென்றிருந்தேன். எனக்கு முன்னமே அடர்ந்த பரட்டை தலையுடன் கூடிய இருவர் முடியை திருத்தம் செய்வதற்கு காத்துக் கொண்டிருந்தனர். இளைஞர் ஒருவர் முடி திருத்தம் செய்பவரிடம் தன் தலையை கொடுத்ததிலிருந்து வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு அளவுகளில் மாற்றி மாற்றி வெட்டச் சொல்லி முடி திருத்தம் செய்பவரை சோதனை செய்து கொண்டிருந்தார்.
எப்படியும் நாம் முடி திருத்தம் செய்வதற்கு குறைந்தது 2 மணி நேரமாவது ஆகிவிடும் என்று மனதில் நினைத்துக்கொண்டு அங்கே இருந்த செய்திதாள்கள் ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது தினமலர் பத்திரிக்கையுடன் ஞாயிறு இணைப்பாக வரும் வாரமலரை புரட்டி பார்க்கும் போது என் கண்ணில் பட்ட ஒரு செய்தியை இங்கே பகிர விரும்புகிறேன்.
அந்த வாரமலரில் வாசகர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்வருமாறு பகிர்ந்து கொள்கிறார்.
அதாவது அந்த இளைஞர் தனது அலுவலகத்திற்கு வழக்கம் போல காலை 8 மணிக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார். அப்பொழுது குட்டியானை என்று சொல்லக்கூடிய TATA ACE வண்டியின் டிரைவர் மற்றும் கிளினர் ஆகிய இருவரும் அந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தை வழி மறித்துள்ளனர்.
அந்த இளைஞரும் இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று நினைத்து வண்டியை நிறுத்தியுள்ளார். அந்த ஓட்டுநர் பார்ப்பதற்கு எப்படி இருந்தார் என்றால் நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை என காக்கி உடையில் ரம்மியமாக காட்சி அளித்தார்.
அந்த இளைஞரிடம் ” தம்பி நமக்கு முன்னே 30 அடி தூரத்தில் இருக்கும் எனது வாகனம் செல்ஃப் எடுக்காமல் நின்று விட்டது” நீங்கள் எனது கிளினருடன் சேர்ந்து சற்று தூரம் தள்ளி விட்டால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும் என்று சொல்லி உதவி கேட்க…
அந்த இளைஞரும் ஓட்டுநருக்கு உதவி செய்யும் பொருட்டு தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை சைடு ஸ்டாண்ட் போட்டு விட்டு சாவியை கூட எடுக்காமல் ஓட்டுநரின் “டாடா ஏஸ்” வண்டியை தள்ளி விட ஆரம்பித்தார். அந்த இளைஞரின் உந்துதலில் வண்டி சிறிது தூரம் சென்ற உடன் “குபுக்” என்று ஸ்டார்ட் ஆகிவிட கிளிஞரும், ட்ரைவரும் மிக்க நன்றி என்று அந்த இளைஞருக்கு டாடா காட்டி விட்டு டாடா ஏஸ் – சில் சிட்டாட்டம் பறந்து விட்டனர்.
அந்த இளைஞரும் உதவி செய்த கையோடு ஒரு பெறும் மூச்சி விட்டு விட்டு…..,,,, திரும்பி பார்க்கிறார் உடனே ஒரு பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். ஆம் தனது இரு சக்கர வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டதை உணருகிறார். பிறகு யோசித்து பார்க்கும் போது இந்த திருட்டுக்கு பின்னால் அந்த டிரைவர், கிளிஞர் தான் இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டு பின் பொடி நடையாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். (பயபுள்ள வண்டிய தள்ள விட்டு கடைசியில் என்னுடைய வண்டிய ஆட்டைய போட்டுட்டானே!)
அந்த இளைஞரின் நிலை “உதவி செய்ய வந்தது ஒரு குத்தமாடா” என்பது போல ஆயிற்று…..
இது போன்ற சில ஆயோக்கிய திருடர்களால் முன் பின் தெரியாத பல நல்ல மனிதர்களுக்கு உதவி கிடைப்பது சற்று சிரமமாகவே உள்ளது.எப்பவும் கவனமாக இருப்பது நமது கடமை. ஆதலால் விழித்துக்கொள்…




