சின்னத்திரை நடிகை மோனிஷா, தனது திருமண வாழ்க்கையில் எதிர்கொண்டதாகக் கூறிய அதிர்ச்சிகரமான அனுபவங்களை சமீபத்திய ரியாலிட்டி நிகழ்ச்சியில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சின்னத்தம்பி, பூவே பூச்சூடவா, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள மோனிஷா, தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ‘Second Love’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது 8 ஆண்டுகால திருமண வாழ்க்கை நம்பிக்கை துரோகத்தால் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அன்பாக இருந்த தனது கணவர், பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், படுக்கையறையில் தான் உறங்கும் காட்சிகள் மற்றும் ஆடை மாற்றும் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாக படம் மற்றும் வீடியோ எடுத்ததாகவும், அவற்றை அவரது நண்பர்களிடம் பகிர்ந்ததாகவும் மோனிஷா குற்றம்சாட்டியுள்ளார். இதை நண்பர்கள் கூறியபோது, “உலகமே நொறுங்கிப் போனது போல இருந்தது” என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும், தனது கணவர் அனுமதிக்கவில்லை என்றும், தான் சம்பாதித்த பணத்தை தவறாக செலவழித்து குடும்பத்தை பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் விவாகரத்து கேட்டபோது, “100 சவரனுக்கும் அதிகமான நகைகளை திருப்பித் தரமாட்டேன்” என்று கணவர் கூறியதாகவும், வேறு வழியின்றி அந்த நகைகளை இழந்தே விவாகரத்து பெற்றதாகவும் மோனிஷா தெரிவித்துள்ளார்.
விவாகரத்து ஆவணத்தில் நீதிபதி முன்பு கையெழுத்திட்டபோது, தன்னையே அறியாமல் மகிழ்ச்சியில் துள்ளியதாகவும், அதைக் கண்டு நீதிபதி காரணம் கேட்டபோது, “அவ்வளவு நரக வேதனையை அனுபவித்தேன்” என்று பதிலளித்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
மோனிஷாவின் இந்த உருக்கமான பகிர்வு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பலரும் அவருக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.




