பாம்பு என்றாலே பெரும்பாலான மக்களுக்கு இயல்பாகவே பயம் ஏற்படும். “பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்ற பழமொழி, பாம்புகள் மீது மனிதர்களுக்கு இருக்கும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது.
பாம்புகளைப் பார்த்து மக்கள் பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் விஷம் தான். ஆனால், பாம்புகள் பொதுவாக மனிதர்களை வேட்டையாடுவதற்காகவோ அல்லது தாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ கடிப்பதில்லை. பெரும்பாலும் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தினாலேயே அவை மனிதர்களை கடிக்கின்றன.
பாம்பு கடித்த பிறகு சரியான முதலுதவி செய்வது மிகவும் முக்கியம். அதே நேரத்தில், சிலர் அறியாமல் செய்யும் தவறுகள் பாதிப்பை அதிகரிக்கக்கூடும்.
பாம்பு கடித்தவுடன் செய்யக்கூடாதவை
கயிறு அல்லது துணியால் இறுக்கமாக கட்டக்கூடாது
பாம்பு கடித்த இடத்திற்கு மேல் சிலர் துணி அல்லது கயிற்றை மிகவும் இறுக்கமாக கட்டுகின்றனர். இது சரியான முறையல்ல. இவ்வாறு செய்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள திசுக்கள் சேதமடையும் அபாயம் ஏற்படலாம்.
ஓடவோ, அதிகமாக நடக்கவோ கூடாது
பாம்பு கடித்த பிறகு பதற்றத்தில் ஓடுவது அல்லது அதிகமாக நடப்பது தவிர்க்கப்பட வேண்டும். உடல் இயக்கம் அதிகரித்தால் விஷம் உடலில் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட நபரை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.
கடித்த இடத்தில் விஷத்தை உறிஞ்சக்கூடாது
முதலுதவி செய்வதாக நினைத்து சிலர் பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்ச முயற்சி செய்கின்றனர். இது தவறான முறையாகும். இதனால் உதவி செய்பவருக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
காயத்தை வெட்டுவது அல்லது விஷத்தை வெளியேற்ற முயற்சிப்பது கூடாது
பாம்பு கடித்த இடத்தை வெட்டுதல், காயத்தை அழுத்துதல் போன்ற செயல்கள் பாதிப்பை மேலும் அதிகரிக்கக்கூடும்.
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
- முதலில் பதற்றப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட நபரை அதிகமாக அசையாமல் வைத்திருக்க வேண்டும்.
- உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
- கடித்த பாம்பின் நிறம், வடிவம் போன்ற அடையாளங்களை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம். இது மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
- பாம்பை பிடிக்கவோ அல்லது கொல்ல முயற்சிக்கவோ கூடாது.
பாம்பு கடித்த சம்பவங்களில் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவது உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பயப்படாமல், தவறான முதலுதவி முறைகளை தவிர்த்து உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது மிகவும் அவசியம்.




