மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், விழா ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட யானை தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக யானையை அதன் பாகன் ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது, 49 வயதான ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கர் யானைக்கு வெல்லம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது யானை அமைதியிழந்த நிலையில், அதை கட்டுப்படுத்த பாகன் கைத்தடியால் தட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆக்ரோஷமடைந்த யானை, விஜய் ஹோல்கரை கீழே தள்ளி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




