மனதை ஒருநிலைப்படுத்தி பல்துலக்க கூறும் சித்த மருத்துவம்..!!

 

இப்போது பலருக்கு 30 வயதிலேயே பல் ஆட்டம் காண்கிறது. கிருமிகள் குடியிருக்கின்றன. பல் கூச்சம் அதிகரிக்கிறது.

இந்த நேரத்தில் `ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழி எல்லோருக்கும் நினைவில் இருக்கும். வேலமரக்குச்சிகளில் பல் துலக்க, பற்கள் உறுதியாகி திடமாகும் எனவும், வேப்பங்குச்சிகளில் பல் துலக்க பற்கள் தூய்மையாகும் எனவும், பச்சை நாயுருவி வேரால் பல் அழுக்குகள் நீங்கி பற்கள் அழகாகும் எனவும் நம் முன்னோர் கூறி வைத்துள்ளனர்.

பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கை மர குச்சிகளைப் பயன்படுத்தலாம், என்றும் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

துவர்ப்பு சுவையுள்ள குச்சிகளால், ஈறுகளில் ஏற்படும் புண்கள், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் போன்றவை குணமடைந்து ஈறுகள் பலமடையும். பற்கள் பளிச்சென்று காட்சி அளிக்கும். கசப்பு சுவையுள்ள குச்சிகளால் பற்களில் குடியேறியுள்ள கிருமிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கும். பசுமையான மரங்களிலிருந்து, பூச்சி அரிக்காத நல்ல குச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நீரால் கழுவி, ஒரு பக்க நுனியை கடித்து, ‘பிரஷ்’ போல மாற்றிக்கொண்டு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு பல் இடுக்குகளிலும், ஈறுகளிலும் குச்சியின் நுனியைக்கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். நடந்துகொண்டும் `செல்போனில்’ பேசிக்கொண்டும் பல் தேய்க்கக்கூடாது. ஓரிடத்தில் நிலையாக இருந்து, மனதை ஒருமுகப்படுத்தி பல் துலக்க வேண்டும், என்கிறது சித்த மருத்துவம்.

வைட்டமின்-சி குறைபாட்டால் ஏற்படும் `ஸ்கர்வி’ நோயினால் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிவது இயல்பு. எனவே, அந்த நிலையில் வேப்பங்கொழுந்தால் ஈறுகளை மிருதுவாகத் தடவலாம். திரிபலா சூரணத்தால் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவை) வாய் கொப்பளிக்கலாம். அத்துடன், வைட்டமின்-சி குறைபாட்டைப் போக்க மருத்துவ சிகிச்சை தேவை. கால்சியம் சத்து நிறைந்த கீரைகள், காய்கள், பால் பொருட்களை உட்கொள்வதால் பற்கள் பலமடையும்.

சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம். லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும். திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது.

Read Previous

தோலில் உள்ள தேமல் படி படியாக மறைய சில பயனுள்ள இயற்கை வழிமுறைகள்..!!

Read Next

திடீரென விருந்தினர் உங்க வீட்டுக்கு வந்தா.. கண்டிப்பா இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular