நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த சிங்கம்பாறையைச் சேர்ந்த மரியா ஜெயா (41) என்பவர், கடந்த 9-ஆம் தேதி நெல்லைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நெல்லை டவுன் கல்லணை பள்ளி அருகே பூட்டியிருந்த வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, மரியா ஜெயா அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
பிரேதப் பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயம் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தச்சநல்லூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (26) என்பவர் மரியா ஜெயாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கட்டையால் தாக்கி கொலை செய்ததும், பின்னர் அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்று வீட்டை பூட்டிவிட்டு தப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




