குடியாத்தத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்த தாமரைச்செல்வி, அவரது கணவர் அரவிந்தனால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதா என்றும், ஏற்கெனவே புகார்கள் இருந்த நிலையில் ஒரு உயிரை கூட காப்பாற்ற முடியாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை காவல்துறையினர் சாதாரண குடும்பத் தகராறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்திய வேல்முருகன், புகாரின் பின்னணியில் உயிருக்கு ஆபத்து உள்ளதா என்பதை தீவிரமாக மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆபத்து இருப்பது தெரியவரும் பட்சத்தில், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




