திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தாளையூத்து ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்த தவெக நிர்வாகி மணிகண்டன், ஊராட்சி செயலரை நிற்க வைத்து ‘செல்ஃபி’ எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாளையூத்து கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தவெக தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன் ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்றார்.
அங்கு நாற்காலியில் அமர்ந்தபடி ஊராட்சி செயலர் தண்டபாணியை நிற்க வைத்து குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டறிந்ததுடன், அலுவலகத்தில் இருந்த கோப்புகளையும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடன் சென்ற ஆதரவாளர் ஒருவர் ‘செல்ஃபி’ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என ஏற்கெனவே கட்சி தலைமையால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி ஆய்வு செய்ததுடன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.




