இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பீகார் மாநிலத்தின் டும்ரான் பகுதி மக்கள் மட்டும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16-ம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு பின்னால் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உள்ளது. கடந்த 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, காவல் நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக மக்கள் பேரணியாக சென்றுள்ளனர்.
அப்போது பேரணியை தடுத்து நிறுத்திய ஆங்கிலேய காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16-ம் தேதி அப்பகுதி மக்கள் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
நாடு சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு அடுத்த நாளில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக இந்தப் பகுதியில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வு இன்றும் தொடர்வது வரலாற்றில் தனித்துவமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.




