2011-ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ மக்கள் இயக்கத்தின் தொடர்ச்சியாக, அரவிந்த் கெஜ்ரிவால் 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார்.
நேர்மையான அரசியலை முன்னிறுத்தி, துடைப்பம் சின்னத்தில் தேர்தல் களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி, 2013-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தது.
அதன்பின்னர் டெல்லியில் தொடர்ந்து தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திய அக்கட்சி, பஞ்சாபிலும் ஆட்சியை கைப்பற்றியது. குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் கவனம் பெற்ற அரசியல் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்தது.
ஒரு மக்கள் இயக்கத்தின் பின்னணியில் தொடங்கிய கட்சி, தேர்தல் அரசியலில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று தேசியக் கட்சி அந்தஸ்தை அடைந்தது இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.




