நம் நாட்டுப் பெண்கள் மிகச் சிறந்த தாய்மார்கள்..!! மனைவிகளல்ல.. !!

நம் நாட்டுப் பெண்கள் மிகச் சிறந்த தாய்மார்கள்.. மனைவிகளல்ல..

ஊரையே AC பண்ணியது போல் சில்லென்றிருந்தது. ஆபீஸில் எனக்கு வேலையே ஓடவில்லை. இந்தக் குளிருக்கும் மழைக்கும் இதமாக பக்கோடா செய்து சாப்பிட்டால் அதுவும் degree காபியுடன்… நினைக்கும் போதே மனம் பரவச நிலையில். உடனடியாக Permission போட்டுவிட்டு மழையைப் பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி விரைந்தேன். மனமெங்கும் “பக்கோடா with filter coffee ” stimulate பண்ணிக் கொண்டிருக்க…. எப்படி வீட்டுக்கு வந்தேன் என்பதே புரியாமல் மனைவியைக் கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டே என் அபிலாஷையை வெளியிட்டேன்…

வந்ததே கோபம் அவளுக்கு… “என்ன நினைச்சுட்டுருக்கீங்க…
கார்த்தாலேர்ந்து மனுஷி படற பாடு என்ன தெரியுமா? சொகுசா வந்து பக்கோடாவாம் காஃபியாம்… அதெல்லாம் ஒரு மண்ணும் முடியாது… சொல்லிட்டேன்…”
எதிர்பார்த்து ஏமாந்து போனதால் வெறுப்பானேன்.
சட்டென்று அம்மா ஞாபகம் வந்தது. ஏமாந்து போனபின் அம்மா ஞாபகம் வந்தது ஒரு குற்ற உணர்ச்சியை
ஏற்படுத்தியது… அம்மாவும், அப்பாவும் பக்கத்துத் தெருவில் தான் “தனிக்குடித்தனம்” வசிக்கின்றனர். அவர்களால் எங்களுடனும், எங்களால் அவர்களுடனும் அட்ஜஸ்ட் செய்து இருக்க முடியாமல் போனதால் அம்மாவும் அப்பாவும் சுயமரியாதையுடன் தனியே வசிக்கின்றனர்.

அம்மாவைப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றால் அப்பாவின் கெஞ்சல் குரல் கேட்டது. அப்பாவுக்கு “ரவா உப்புமா ” ரொம்ப பிடிக்கும். அதைத்தான் அம்மாவிடம் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார். நச்சரிப்பு என்பது அம்மாவின் பாஷை. உண்மையில் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
எனக்கு என் மனைவியிடம் என்ன திட்டு விழுந்ததோ ‘Same blood’ அப்பாவின் காதுகளில்.. கூடுதலாக வயதையும் சுட்டிக் காட்டி வாயை அடக்கச் சொல்லி செம டோஸ்… நான் உள்ளே நுழைந்ததும் இருவரின் முகங்களும் மலர்ச்சியில்….
” என்னப்பா நீ மட்டும் வந்துருக்கே… பேரனை பார்த்து நாளாச்சுடா… ஏன் கூட்டிண்டுவரல்ல ?”.
” அம்மா, அவனுக்கு இந்த மழைலயும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா ” என்று சமாளித்தேன்.
அது பொய்யென்று அம்மாக்குத் தெரிந்தாலும் சொன்னது நானென்பதால் கண்டு கொள்ளவில்லை ” சரி, சரி உட்காரு. அப்பாட்ட பேசிட்டுரு.. இப்ப கொஞ்ச நேரத்தில உனக்குப் பிடித்த பக்கோடா செஞ்சு தரேன்…”
அப்பா முகத்தில் சின்னதாய் ஏமாற்றம் தெரிந்தாலும் எனக்காக காட்டிக் கொள்ளாமல் வெறுமையாய் சிரித்தார். பாவமாயிருந்தது..‌

” அம்மா, எனக்கு பக்கோடா வேண்டாம், உன் கைப்பக்குவத்தில்
இன்னிக்கு ‘ரவா உப்புமா’ சாப்பிடணும் போல இருக்கு…”
” அவ்ளோதானே.., இதோ பத்தே நிமிஷம்”. அப்பாவின் முகத்தில் என்னைப்பார்த்து சிரிப்பதில் ஒரு சின்ன நன்றி உணர்சசி எனக்குத் தென்பட்டது.
என்னுடன் சேர்ந்து ரவா உப்புமாவை ஆசையாக சாப்பிட்ட அப்பா, நான் அடைந்த பக்கோடா பரவசத்தை உப்புமா பரவசமாக அனுபவித்தார்… சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து வீட்டுக்குத் திரும்பினேன்.. மனைவி என் மகனுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு பஜ்ஜியை ஆவலாய் செய்து கொண்டிருந்தாள்.. எனக்காக செய்ய முடியாத பக்கோடா மகனுக்கு பஜ்ஜியாக செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

#நீதி: நம் நாட்டுப் பெண்கள் மிகச் சிறந்த #தாய்மார்கள்…

#மனைவிகளல்ல…

Read Previous

படித்ததில் பிடித்தது..!! தியாகம் செய்வதில் யார் முதன்மையானவர்..?? தாயா?? தந்தையா??

Read Next

எத்தனையோ மரங்கள் இருப்பினும் புளிய மரத்தை ஏன் சாலையோரம் வைத்தார்கள்..?? என்று தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular