பெண் குழந்தை பெற்று விட்டோமே…
தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும்
நிலம் வாங்கி சேர்க்க வேண்டும்
செலவை குறைத்து
சேமித்த பணத்தை
வங்கியில் போட வேண்டும் என்று
ஏங்கித் தவிக்காதீர்கள்
தூக்கம் மறந்து துவளாதீர்கள்
துக்கம் கொள்ளாதீர்கள்
நீங்கள் ஆற்ற வேண்டியது
ஒன்றே ஒன்று தான்…
பெண் பிள்ளைகளுக்கு
நல்ல கல்வியைக் கொடுங்கள்
எதையும் எதிர்த்து
ஏறி மிதித்து வாவென்று
தன்னம்பிக்கையை கொடுங்கள்
விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள்
இசை பயில, நடனம் பயில
தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால்
அதற்கான வழிகளை செய்து கொடுங்கள்.
இன்னொரு வீட்டில்
இல்லத்தரசியாய் வாழப் போகிறவள் தானே என்று
சமையல் பழக்குவதை விடவும்
சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும்
தையல் பழக்குவதை விடவும்,
பிரச்சனைகளின் போது
எப்படி மீள வேண்டும்
பிரிவுகளின் போது
தனித்து எப்படி வாழ வேண்டுமென்று
தைரியத்தை சொல்லிக் கொடுங்கள்
அதட்ட வேண்டிய நேரம்
அதட்டி வளருங்கள்..
தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம்
தட்டிக் கொடுங்கள்
பெண்ணுக்கு அறிவை விடவும்,
தங்கமோ நிலமோ பெரியதில்லை
படிப்பிருந்தால்
தங்கமும் நிலமும் பணமும்
தானாய் வந்து கதவு தட்டும்
உங்கள் வளர்ச்சியைக் கண்டு
உலகம் கைகள் தட்டும்
சிறப்புடன் வாழ
சிரிப்புடன் வாழ வைப்போம்..
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா..




