எதிர்காலத் தேவைகளுக்காக பாதுகாப்பான முறையில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு பெரிய தொகையை உருவாக்க விரும்புவோருக்கு, இந்திய அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதித் திட்டம் (Recurring Deposit) சிறந்த சேமிப்பு வாய்ப்பாக விளங்கி வருகிறது.
மத்திய அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கிறது. சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிப்பு இல்லாமல், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையில் வருமானம் கிடைப்பது இதன் முக்கிய அம்சமாகும்.
தற்போதைய நிலவரப்படி, அஞ்சலக தொடர் வைப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டியாகக் கணக்கிடப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஒருவர் மாதம் ரூ.2,000 வீதம் தொடர்ந்து 5 ஆண்டுகள் சேமித்தால், மொத்த முதலீடு ரூ.1.20 லட்சமாக இருக்கும். முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.1,42,732 வரை கிடைக்கும். அதாவது, முதலீட்டாளருக்கு சுமார் ரூ.22,732 கூடுதல் வருமானமாக கிடைக்கும்.
இந்தக் கணக்கைத் தொடங்க பெரிய தொகை தேவையில்லை. மாதம் குறைந்தபட்சம் ரூ.100 முதல் சேமிப்பைத் தொடங்கலாம். தனிநபர்கள் தங்களது பெயரிலோ அல்லது குழந்தைகளின் பெயரிலோ அஞ்சலகத்தில் கணக்கைத் தொடங்கும் வசதி உள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லாததால், விருப்பத்திற்கேற்ப ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் தொடங்கி சேமிப்பை அதிகரிக்கலாம். அவசரத் தேவைகளின் போது, கணக்கின் அடிப்படையில் கடன் பெறும் வசதியும் உள்ளது.
பங்குச் சந்தை அபாயங்கள் இல்லாமல், நிலையான வருமானத்துடன் நீண்டகால சேமிப்பை உருவாக்க விரும்பும் நடுத்தரக் குடும்பங்களுக்கு அஞ்சலக தொடர் வைப்பு நிதித் திட்டம் ஒரு நம்பகமான சேமிப்பு வாய்ப்பாக உள்ளது.




