இன்று அக்டோபர் 28, போலியோ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் பிறந்த தினம்.
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் யூத பெற்றோர்களுக்கு 1924 ல அக்டோபர் 28ம் நாள் பிறந்தவர். இவர் வைராலஜி, தொற்று நோயியல் போன்றவற்றில் உயரிய பட்டம் பெற்றிருக்கிறார். உலகம் முழுவதும் இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோய் பரவியிருந்த சமயம். இந்த நோய் ஒருமுறை தாக்கினால் பின்னர் அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அச்சமும் மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருந்தது.
பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் டாக்டர் ஜோனஸ் சால்க் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார்.
கண்டுபிடித்த மருந்தை தங்களுக்கு தாங்களே செலுத்தி பார்த்து, தீங்கு எதுவுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு நாடு முழுக்க உள்ள ஐந்து லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை செலுத்தினார்கள்.
டாக்டர் ஜோனஸ் சால்க் தான் கண்டு பிடித்த அற்புதமான மருந்துக்கு காப்புரிமை பெறவில்லை. அதற்கான விருப்பமே அவரிடம் இருந்தது இல்லை. பேட்டி ஒன்றில், ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரிய ஒளிக்கெல்லாம் காப்புரிமை வாங்குவார்களா? என்று கேட்டார்.
இன்று பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்… போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை…!




