Oplus_131072
இன்று மகாளய அமாவாசை
மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்குவது நம் சந்ததிக்கு ஆசிர்வாதம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது.
வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் இந்த வருடம், வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி திங்கட் கிழமை துவங்குகிறது. செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மகாளய அமாவாசை வருகிறது.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது.
இந்த மகாளயபட்ச அமாவாசை காலகட்டம் எப்பேர்ப்பட்ட பித்ரு சாபத்தையும் நீக்க வல்லது. நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது இடம் மிகவும் முக்கியமானது. ஓடுகிற நீர் இருக்கும் இடத்தில் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். எனவே ஆற்றங்கரை அல்லது கடற்கரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
திதி கொடுக்க உகந்த நேரம்:தர்ப்பணம் கொடுக்க அன்றைய தினம் காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்துக் கொள்ளவும். பெரும்பாலும் அதிகாலை முதல் 7 மணி வரை கொடுப்பது மிகவும் சிறப்பானதாகும்.
தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்து பித்ருக்களை வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.




