சமீபத்திய சில ஆய்வுகள் மற்றும் நிபுணர் கருத்துகள், ‘நரைமுடி என்பது வெறும் அழகியல் மாற்றம் மட்டுமல்ல; உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும், சாத்தியமான நோய்களையும் சுட்டிக்காட்டக்கூடின’ என்று கூறுகின்றன.
பொதுவாக வயதாவதின் அறிகுறியாகக் கருதப்படும் நரை முடி, சில நேரங்களில் உடலின் உள்ளே நடக்கக்கூடிய மாற்றங்களான ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் செல் சேதம் போன்ற காரணிகளை குறிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய சில ஆய்வுகள் மற்றும் நிபுணர் கருத்துகள், ‘நரைமுடி என்பது வெறும் அழகியல் மாற்றம் மட்டுமல்ல; உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும், சாத்தியமான நோய்களையும் சுட்டிக்காட்டக்கூடும்’ என்று கூறுகின்றன.
பேராசிரியர் எமி நிஷிமுரா தலைமையிலான டோக்கியோவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, நேச்சர் செல் பயாலஜி என்ற மருத்துவ இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மருத்துவரான விவேக் பாண்டே தன்னுடைய பேட்டியொன்றில் இதுபற்றி கூறுகையில், “ஆண்களில் 30 வயதுக்கு முன்பும், பெண்களில் 25 வயதுக்கு முன்பும் நரை முடி தோன்றத் தொடங்கினால், அது உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் விளைவாக இருக்கலாம்” என்கிறார்.
ஆய்வுகளின்படி இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உடலில் உருவாகும் ‘ஃப்ரீ ரேடிக்கல்கள்’ எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படுகின்றன. அவை செல்களின் டிஎன்ஏவை சேதப்படுத்தி, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். இதே செயல், முடியின் நிறமியான மெலனின் உற்பத்தியைக் குறைத்து, முடி நரைப்பதற்கு காரணமாகிறது.
“ஆனால், நரை முடி இருப்பது மட்டுமே புற்றுநோய்க்கான நேரடி அறிகுறி அல்ல. இருப்பினும் இளநரை என்பது, உடலின் செல்களில் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியே” என்கிறார் மருத்துவர்.
புற்றுநோய்க்கான பொதுவான காரணிகள், புகைபிடித்தல், மது அருந்துதல், மரபியல் காரணங்கள், உடல் பருமன், காற்று மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவையே ஆகும். இவை அனைத்தும் நரை முடியையும், செல் சேதத்தையும் வேகப்படுத்தும்.
எனினும், வாழ்க்கை முறை பழக்கங்கள்தான் முடி நரைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. உதாரணமாக புகைப்பிடித்தல், மாசு, சத்து குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மற்றும் நீண்டநாள் மன அழுத்தம் போன்றவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரித்து, முடி முன்கூட்டியே நரைப்பதற்கும், நோய் அபாயத்திற்கும் வழிவகுக்கலாம்.
எனவே, நரை முடி தோன்றியதால் மட்டுமே பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஆனால், உடலுக்குள் ஏதேனும் சமநிலையின்மை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
வாழ்க்கை முறை, உணவு பழக்கம், உடல் நல பராமரிப்பு ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வதற்கான சந்தர்ப்பமாகவே இளவயது நரைமுடியை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், புற்றுநோய் அபாயம் குறித்த வதந்திகளால் குழப்பமடையாமல், நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதுதான் சிறந்தது.




