கம்பங்கூழ்
தேவையான பொருள்கள்
கம்பு – ஒரு கப்
கூழ் கரைக்க:
வெங்காயம் – ஒன்று
தயிர் – அரை கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கம்பை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கம்பு ஊறியதும் எடுத்து ஊறிய தண்ணீரை வடித்து விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். (காலையில் ஊற வைத்து 11 மணி போல் அரைத்து வைத்தால் இரவில் கூழ் கிண்டி விடலாம்.)
அகன்ற பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள கம்பு மாவுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றவும்.
இடை விடாமல் கிண்டிக் கொண்டே இருக்கவும். சற்று கெட்டியான பதம் (களி பதத்திற்கு) வந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.
இதை 8 மணி நேரம் வெளியில் வைத்து புளிக்க விடவும்.
அடுத்த நாள் காலையில் கெட்டியாக இப்படி இருக்கும். கூழிலிருந்து சிறிது எடுத்து அதனுடன் வெங்காயம், தயிர், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும்.
கெட்டியான கூழுடன் மீன் (அ) கருவாட்டு குழம்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
சுவையான வெயிலுக்கு இதமான உடலுக்கு குளிர்ச்சியான கம்பங்கூழ் தயார்.
கம்பை சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அரைத்த பின் 8 மணி நேரம் நன்கு புளிக்க விட வேண்டும்.
கூழ் செய்த பிறகும் 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். கூழ் புளித்தால் தான் சுவையாக இருக்கும்.




