திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று (ஜூலை 29) ஒரே நாளில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் செலுத்திய காணிக்கையின் மூலம் கோயில் உண்டியல் வருமானமாக ரூ.4.68 கோடி வசூலாகியுள்ளது. இதனிடையே, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் பக்தர்களால் நிரம்பியுள்ளதால், தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலவச தரிசனத்திற்கான டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
மேலும், நேற்று மட்டும் 31,319 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதேபோல், பக்தர்களின் தேவைக்காக வழங்கப்படும் பிரசாதமான லட்டு விற்பனையும் அதிகரித்து, ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




