ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவது நாம் யாருக்கும் பிடிக்காது. அப்படி இறுக்கையில் விதவிதமாக செய்து சாப்பிடவேண்டும் என்று நம் மனம் சொல்லும். அப்படி, சுவையும் சத்தும் நிறைந்த இந்தத் தேங்காய் சாதத்தை சமைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவையோடு உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும். இதனை எளிமையாக எப்படி செய்வதென்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை:
சமைத்த சோறு 2 கப்,
துருவிய தேங்காய் 1/2 கப்,
கடுகு 1 ஸ்பூன்,
உளுந்துபருப்பு 1/2 ஸ்பூன்,
கடலை பருப்பு 1 ஸ்பூன்,
சீரகம் 1 ஸ்பூன்,
வர மிளகாய் 3,
கருவேப்பிலை 2 கொத்து,
பெருங்காயம் 1/4 ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்
தேவையான அளவு உப்பு.
செய்முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காயை நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும். இப்போது பாத்திரத்தில் மீண்டும் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வடித்து வைத்த சாதத்தை இதில் சேர்த்து கிளறவும். இதனைத் தொடர்ந்து தனியாக வறுத்து வைத்த தேங்காயை இவற்றுடன் சேர்த்து சிறிது நேரம் கிளறி எடுக்கவும். அவ்வளவுதான், சுவையான தேங்காய் சாதம் தயார்.




