Oplus_131072
🌞 கோடை காலத்தின் உச்ச நாட்களான கத்திரி வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்துகிறது.
🌞 கொளுத்தும் வெயிலால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் நடந்து செல்லும் மக்கள், வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கும் உடலில் வியர்க்குரு ஏற்பட்டு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
கத்திரி வெயிலின் பாதிப்புகள் :
🌞 நீர்ப்பற்றாக்குறையின் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதிப்புகள், அம்மை, மஞ்சள் காமாலை, கண் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். வெயிலின் காரணமாக உடல் சூடேறி ரத்தம் உஷ்ணமாகி பித்த நீர் அதிகமாவதால் பல்வேறு நோய்த்தொந்தரவுகள் ஏற்படும்.
கத்திரி வெயிலிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?
🌞 அதிக வியர்வை வெளியேறும் இந்தக் காலகட்டத்தில் தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியமாகும். வெறுமனே தண்ணீர் என்றில்லாமல் இளநீர், நீர்மோர், நன்னாரி சர்பத், எலுமிச்சைப் பழச்சாறு, வெட்டிவேர் ஊற வைத்த மண்பானைக் குடிநீர் போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.
🌞 இயற்கையான முறையில் பெறப்படும் இவற்றை அருந்துவதால் உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. ஆனால், சிலர் இவற்றோடு ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்கட்டிகளை சேர்த்து அருந்துவார்கள். இவற்றால் வெயிலின் உஷ்ணம் குறைந்தது போல தெரிந்தாலும் பின்வரும் நாட்களில் தொண்டையில் பாதிப்பு, சளித்தொந்தரவுகள், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
🌞 கோடையில் செரிமானக்கோளாறுகளை மனதில்கொண்டு ஃபாஸ்ட்புட் மற்றும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் சூடான, காரம் நிறைந்த மசாலா உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவை வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
🌞 கோடை காலங்களில் தினமும் இரண்டு தடவையாவது குளிப்பது நல்லது. தண்ணீருடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் குளிக்கலாம். வாரம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்துக் குளித்து வருவது நல்லது.
🌞 எண்ணெய் குளியலின்போது கடலை மாவு, தயிர் சேர்த்துக் குளிக்கலாம். வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு மற்றும் நுங்கு போன்றவற்றை உடம்பில் தேய்த்துக் குளிக்கலாம். பகல் வேளைகளில் சந்தனத்தை உடம்பில் தேய்த்து வருவதன் மூலம் சொறி, சிரங்கு, வியர்க்குரு போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
🌞 வெயிலில் செல்லும்போது குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்தலாம். ஓய்வு நேரங்களில் மரங்களின்கீழே இளைப்பாறுவதை வழக்கமாகப் பின்பற்றுங்கள்.
🌞 கேழ்வரகு – கம்பங்கூழ், வெந்தயக்களி, தர்பூசணி ஜூஸ், வெள்ளரிப்பிஞ்சு, பனை நுங்கு, பதநீர் என இயற்கை வழி சார்ந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கத்திரி வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.




