Oplus_131072
நீங்கள் எந்த காரணத்திற்காக சாப்பிடுகிறீர்கள் என எப்போதாவது யோசித்தது உண்டா…?
இந்த கேள்விக்கான பதிலை பார்ப்பதற்கு முன் சர்வதேச மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வு முடிவை பார்த்து விடுவோம்.
‘நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகமாக உழைக்கும் உடலுறுப்பு எது…’?
இது தான் அந்த ஆய்வுக்கான கேள்வி.
இதற்கு எல்லா மருத்துவர்களும் ஒருமித்தாக கூறிய ஒரே பதில்…
‘வயிறு’.
ஆமாம். நம் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க ஓயாமல் உழைக்கும் முதன்மையான உறுப்பு வயிறு தான்.
மருத்துவர்கள் நடத்திய ஆய்வு முடிவில் பிற உடலுறுப்புகளின் முக்கியத்துவம் இதோ:
1. வயிறு(குடல்கள் மற்றும் இரைப்பை)
2. இதயம்
3. மூளை
4. நுரையீரல்
5. கல்லீரல்
6. சிறுநீரகம்
7. மண்ணீரல்
8. தோல்
9. தசைகள் மற்றும் எலும்புகள்
10. எண்டோகிரின் அமைப்பு (ஹார்மோன்கள்)
ஆக, இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது வயிறு தான்.(வயிறு என்றால் குடல்கள் மற்றும் இரைப்பை மட்டுமே. வயிற்றில் உள்ள பிற உறுப்புகளை இதில் சேர்க்க வேண்டாம்)
சரி, இப்போது இந்த பதிவின் முதல் கேள்விக்கு வருவோம்.
‘நீங்கள் எந்த காரணத்திற்காக சாப்பிடுகிறீர்கள் என எப்போதாவது யோசித்தது உண்டா…?’
உணவு சாப்பிடுபவர்களில் நான்கு வகையினர் உள்ளனர்.
1. பசிக்கும்போது எது இருந்தாலும் சாப்பிடுபவர்கள்.
2. நமக்கு பிடித்த உணவை சமைத்து, ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்.
3. உடலுக்கு தீங்கிழைக்காத ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் வகையில் கார்ப்ஸ், புரோட்டீன், ஃபைபர் என தேடி தேடி சாப்பிடுபவர்கள்.
4. ஓய்வு நேரங்களில் கிடைக்கும் ஸ்நாக்ஸ்களை சாப்பிடுபவர்கள்.
இந்த நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் வந்து விடுவீர்கள்.
ஆனால், இந்த பதிவை படிக்கும் உங்களில் யாராவது ஒருவர், ‘நம் வயிற்றையும், நம்மையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பாக்டீரியாக்களுக்கு இன்று நல்ல உணவு கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் நீங்கள் சாப்பிட்டுள்ளீர்களா…?
எதே….பாக்டீரியாக்களுக்கு சாப்பாடு போடனுமா…?
ஆமாம்.
நம் உடலை எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும் ஒரு இயற்கையான மருத்துவர் நமக்குள்ளேயே இருக்கிறார் என உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அது தான் ‘நோய் தடைக்காப்பு மண்டலம்’.
இந்த நோய் தடைக்காப்பு மண்டலத்தை சேர்ந்த செல்களில் 80% செல்கள் குடல்களில் தான் உள்ளன.
உடலுக்கு தீங்கிழைக்கும் கிருமிகள் ஏதாவது நுழைந்தால், அவற்றை இந்த செல்கள் எதிர்த்து போராடும். அப்படி போராடுவதற்கு முன்கூட்டியே பயிற்சி அளிப்பது இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான்.
ஆக, ‘நல்ல பாக்டீரியா மற்றும் நோய் தடைக்காப்பு மண்டல செல்கள் ஆகிய இருவரும் நண்பர்கள்’ தான்.
இந்த முக்கியப் பணி மட்டுமல்லாமல், என்சைம்களால் ஜீரணம் ஆகாத சில கடினமான உணவுகளை இந்த பாக்டீரியாக்கள் உடைத்து ஜீரணம் செய்கின்றன.
ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அங்கே இரத்தம் வெளியேறும். சிறிது நேரத்திலேயே காயத்தில் இரத்தம் உறைய(blood clot) வேண்டும். இந்த உறைதலுக்கு வைட்டமின் K தேவை.
இந்த வைட்டமின் K-வை உற்பத்தி செய்வது நல்ல பாக்டீரியாக்கள் தான்.(சில உணவுகள் மூலமும் இந்த வைட்டமின் கிடைக்கும்).
சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் B-ஐ உற்பத்தி செய்வதும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான்.
நம் அன்றாட உணவில் மாமிசத்தை விட காய்கறிகளை தான் அதிகம் சாப்பிடுகிறோம். இந்த காய்கறிகள், பழங்களில் அதிகம் உள்ளது Fiber.
இந்த ஃபைபரை நம் இரைப்பை மற்றும் சிறுக்குடலால் ஜீரணம் செய்ய முடியாது. எனவே, சாப்பிட்ட காய்கறி அப்படியே பெருங்குடலுக்கு செல்லும். அங்கே உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான் நொதித்தல் மூலம் இந்த ஃபைபர்களை ஜீரணம் செய்யும். அப்போ, இது எவ்வளவு முக்கியமான பணி தானே?
இதுமட்டுமில்லாமல், வயிறு உப்புசம், வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கும் ‘தீய பாக்டீரியாக்களின்’ எண்ணிக்கையை இவை கட்டுப்படுத்துகின்றன.
சுருக்கமாக, குடல்களில் நல்ல பாக்டீரியாக்கள் குறைந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து அவை ஆபத்தில் கூட முடியலாம்.
சோ, நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களுக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பது அவசியம் தானே…?
சரி, நல்ல பாக்டீரியாக்களுக்கு எந்த உணவை கொடுக்கலாம்..? எதை அவை விரும்பி சாப்பிடும்…?
நீங்கள் எங்கேயும் தேடி அலய வேண்டாம்…உங்கள் வீட்டிலேயே தினமும் கிடைக்கும்.
ஆம். அந்த உணவு ‘பழைய சாதம்’ தான்.
இந்த பழைய சாதத்தை தான் நல்ல பாக்டீரியாக்கள் விரும்பி சாப்பிட்டு இன்னும் பல மில்லியன் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்.
சுமார் 16 மணி நேரம் நல்ல தண்ணீரில் சாப்பாட்டை ஊற வைக்கும்போது அதில் மில்லியன் கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும்.
இந்த சாதத்தை நீங்கள் காலையில் சாப்பிடும்போது, சாப்பாடு+நல்ல பாக்டீரியா உள்ளே செல்லும்.
குடல்களுக்கு செல்லும் இந்த நல்ல பாக்டீரியா விரித்தி அடையும். மேலும், அங்கே ஏற்கனவே உள்ள நல்ல பாக்டீரியா இந்த பழைய சாதத்தை விரும்பி சாப்பிட்டு இன்னும் பல மில்லியன் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்.
நீங்கள் பழைய சாதம் சாப்பிடுவதன் மூலம் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க மட்டும் செய்யவில்லை. தீய பாக்டீரியாக்களை அழிக்கவும் செய்கிறீர்கள்.
எப்படி…?
பழைய சாதத்தில் லேக்டோ அமிலம் உள்ளது. இது நல்ல பாக்டீரியாக்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இது தீய பாக்டீரியாக்களுக்கு பிடிக்காது. எரிச்சலை ஏற்படுத்தும். இந்நிலை தொடர்ந்தால் பல மில்லியன் தீய பாக்டீரியாக்கள் அழிந்தே போய்விடும்.
ஆக, நீங்கள் பழைய சாதம் சாப்பிடுவதன் மூலம் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கவும் செய்கிறீர்கள், தீய பாக்டீரியாக்களை அழிக்கவும் செய்கிறீர்கள்.
உங்கள் வயிறு தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்க ஒரே வழி குடல்களில் வாழும் நல்ல பாக்டீரியாக்களை ஆரோக்கியமாகவும், அதிக எண்ணிக்கையிலும் வைத்துக் கொள்வது மட்டுமே!
மேலும், இந்த நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக வாழவும், எண்ணிக்கை அதிகரிக்கவும் அதற்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கிய உணவு….
‘ஏழைகளின் புரோபயோட்டிக்’ உணவான ‘பழைய சாதம்’ தான்!




